Saturday, September 23, 2006

8. முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா

"இன்னைக்கு என்ன செய்யப் போற?" ராத்திரிக்கு என்னன்னு கேக்குறாராம் மயிலாரு.

"இன்னைக்கா....கறியெடுத்து கொழம்பு வெக்கனும். கோழியடிச்சி வறுவலு. மீன்...நல்ல நெய் மீனாவோ ரொகுவோ கிடைச்சா அதையும் பக்குவம் செய்யனும்..." பின்னே வேலைய முடிச்சிட்டு அலுத்துப் புலுத்து வர்ரவன் கிட்ட கேக்குற கேள்வியா.

"அடப்பாவி...இத்தன தின்னா குண்டாயிருவ.....பேசாம சத்துள்ளதா ஏதாவது செஞ்சுரு"

"சத்துள்ளதுன்னா? தின்னா சதை போடக்கூடாது. கொழுப்பு ஏறக்கூடாது. சர்க்கரச் சத்து வரக்கூடாது. அதான நீங்க சொல்றது?"

ஒரு கண்ணை மட்டும் திறந்து என்னைப் பார்த்தார் மயிலார். "ஆமா...அதேதான்." வெடுக்குன்னு சொன்னார்.

"சரி...அதையே செஞ்சிருவோம். ஆனா அதைச் செய்றது எப்படீன்னு நீங்களே சொன்னா நல்லாயிருக்கும்........" இழுத்தேன். சொல்றது எல்லாருக்கும் லேசு. ஆனா செய்றது. ஆகையால அவரையே கேட்டுட்டேன். ஆனா அவரு பாக்குறதப் பாத்தா அசந்து போற மாதிரித் தெரியலை.

"ஓட்ஸ் உப்புமா சாப்பிடுறையா? ஓட்ஸ் நல்லது." ஏதோ புதுப் பேர எடுத்து விட்டாரு மயிலாரு. இதுக்குன்னே அகராதி (ரெண்டு பொருள்ளயும் எடுத்துக் கோங்க) இருக்கும் போல.

"ஓட்ஸா? இங்கிலீஷ் கதைகள்ள குதிரைக்குக் குடுக்குறாங்களே! அதா? அது ஏதோ புல் வகையாமே! புலி பசிச்சாலும் புல்லைத் திங்காது தெரியுமா? நாங்கள்ளாம்..."

"நிறுத்து..ரொம்பப் பேசாத. வீட்டுக்குள்ளயே உக்காந்து மூனு வேளையும் மூக்கப் பிடிக்கத் தின்னுக்குட்டு நீர்யான மாதிரி இருக்க. புலியாம் புலி. ஓட்ஸ் உப்புமாதான் செய்யனும் இன்னைக்கு" அவரே முடிவெடுத்தாச்சு. இனி என்னத்த மாத்துறது. "சரி. சொல்லுங்க."

"வெங்காயம் இருக்கா? எடுத்துப் பொடிப் பொடியா நறுக்கிக்க."

"நறுக்கியாச்சு"

"பச்சமெளகா இருக்கா? எடுத்து நடுவுல கீறிக்க"

"கீறியாச்சு"

"கருவேப்பிலை இருக்கா? உருவி வெச்சுக்க"

"உருவியாச்சு"

"முட்டைக்கோசப் பொடிப் பொடியா நறுக்கிக்க"

"நறுக்கியாச்சு"

"ஓட்ஸ் எடுத்து ஒரு கிண்ணத்துல வெச்சுக்க"

"வெச்சாச்சு"

"இப்ப அடுப்புல சட்டிய வெச்சி காய வை"

"வெச்சாச்சு"

"அதுல நல்லெண்ணய ஊத்திக் காஞ்சதும் கடுகு உளுந்தம் பருப்பு போடு"

"போட்டாச்சு"

"கடுகு உளுந்தப் பருப்பு வெடிச்சதும் கருவேப்பிலை வெங்காயம் பச்சமெளகாயப் போட்டு வதக்கு"

"வதக்கியாச்சு."

"லேசா மஞ்சப் பொடியத் தூவு"

"தூவியாச்சு"

"நறுக்கி வெச்ச முட்டைக்கோச அதுல போட்டுக் கூட்டணியாக்கு"

"ஆக்கியாச்சு"

"கிண்ணத்துல இருக்குற ஓட்ஸ அதுல போட்டுக் கிண்டு"

"கிண்டியாச்சு"

"ஒன்னரக் கிண்ணம் தண்ணிய ஊத்திக் கெளறு"

"கெளறியாச்சு"

"தேவையான அளவு உப்புப் போட்டு வேகவிடு"

"விட்டாசு"

"கெட்டியானதும் அடுப்ப அணைச்சுரு"

"அணைச்சாச்சு"

"சட்டியில இருக்குற எடுத்து தலைல போட்டுக்கோ"

"போட்.....அட என்னங்க இது....தலையில போடச் சொல்றீங்க?"

"பின்னே ஒன்ன வெச்சி என்ன பண்றதாம்!... சரி சொன்னதச் செஞ்சியா?"

"செஞ்சாச்சே. ஆனா இது ரவைல செய்ற உப்புமா மாதிரி உதிரியா இல்லையே." லேசாக் கொழகொழப்பா இருக்குற மாதிரி ஒரு எண்ணம்....புதுசாச் செய்றோம்ல.

மயிலார் படக்குன்னு சொன்னாரு. "ரவையில ஒரு சத்தும் கெடையாது. ஒதுல நார்ச்சத்து மொதக்கொண்டு எல்லாம் இருக்கு. கொழுப்பு கெடையாது. சர்க்கரைச் சத்தும் கொறைச்சல். ஒடம்ப மெலிய வைக்கும். அதுனால உதிரி உதிரியா இல்லைன்னாலும் சாப்பிடு. தொண்டைக்குள்ள பட்டுக்கிறாது. இதுக்குத் தயிரும் கொஞ்சமே கொஞ்சமா ஊறுகாயும் வெச்சுக்க. நல்லாயிருக்கும்" விட்டாக் கொத்தீருவாரு போல. மயிலார் சொன்ன மாதிரியே செஞ்ச ஓட்ஸ் உப்புமாவை தட்டுல போட்டு தயிரும் ஊறுகாயும் போட்டு வெச்சிருக்கேன். கை தவறி ஊறுகா நெறைய விழுந்திருச்சு. நீங்க கொஞ்சமா போட்டுக்குங்க. இத நான் சாப்பிட்டிருவேன். ஆகையால நீங்க செஞ்சிச் சாப்பிடுங்க. சரியா?




அன்புடன்,
கோ.இராகவன்