Monday, January 30, 2006

ஹிண்டி மொசுரு

இதென்னடா பேருன்னு பாக்குறீங்களா! அது ஒரு சுவையான விஷயம். இது வடகர்நாடக மக்கள் விரும்பும் ஒரு உணவு. எனக்கும் பெங்களூர் வந்தப்புறம் மிகவும் பிடிச்சுப் போன உணவு. ஆகையால இதப் பத்தி ஒங்களுக்கெல்லாம் சொல்லலாமுன்னு பாக்குறேன். சொல்றத ஒழுங்கா குறிச்சி வெச்சுக்கிட்டு செஞ்சு பாருங்க.

ஹிண்டி மொசுருக்குப் போறதுக்கு முன்னாடி ஈருள்ளிச் சப்பாத்தியப் பாப்போம். ஏன்னா. ஹிண்டி மொசுரத் தொட்டுக்கிட்டுதான் ஈருள்ளிச் சப்பாத்தியச் சாப்பிடனும்.

வடக்கு கர்நாடகா, அதாவது பிஜாப்பூர் சுத்து வட்டாரம். கொஞ்சம் வறண்ட பிரதேசம். மராட்டியும் கன்னடமும் கலந்த கலாச்சாரம். அங்க சோறெல்லாம் கெடைக்காது. சோளமும் கோதுமையும்தான்.

சோளத்தை ஜோளம்-ன்னு சொல்வாங்க. கோதுமைய கோதின்னு சொல்வாங்க. அவங்க ஊருல ஜோளத ரொட்டி (சோள ரொட்டி) ரொம்பப் பிரபலம். சுட்டு வெச்சு அதக் காய வெச்சிக்கிருவாங்க. காஞ்சதும் கடக்மொடக்குன்னு இருக்கும். அந்த ரொட்டிக்கே கடக் ரொட்டீன்னுதான் பேரு. அத ஹிண்டி மொசுருல தொட்டுக்கிட்டு ருசிச்சி ருசிச்சிச் சாப்பிடுவாங்க.

நம்ம ஜோளத ரொட்டியை விட்டுட்டு ஈருள்ளிச் சப்பாத்தியைப் பார்ப்போம். நம்ம செய்யுற சப்பாத்தி போலதான். ஆனா வெங்காயத்த இடிச்சுச் சாறெடுத்து அதச் சப்பாத்தி மாவுல கலந்துருவாங்க. இப்ப மிக்சர் இருக்குறதால வெங்காயத்தை நல்லா அரைச்சு சப்பாத்தி மாவுல பெசஞ்சு கலந்துருவாங்க. அதச் சப்பாத்தி போட்டா அதுதான் ஈருள்ளிச் சப்பாத்தி. அங்க வெயில் நெறைய. அதனால குளிர்ச்சிக்கு வெங்காயத்தை இப்படி சேத்துக்குவாங்க.

இப்ப ஈருள்ளி சப்பாத்தி தயார். ஹிண்டி மொசுருதான் மிச்சம். இதுல மொசுருன்னா தயிர். அவ்வளவுதான். ஆகையால நாம இப்பப் பாக்க வேண்டியது ஹிண்டி மட்டும்தான்.

நிலக்கடலப் பருப்பை எண்ணெய்யில்லாம நல்லா வறுத்து, தோல உரிச்சுக்கணும். அத்தோட பூண்டுப் பற்கள், கொஞ்சம் கல்லுப்பு, தேவையான அளவு மெளகாத்தூள் போட்டு இடிச்சு வெச்சுக்கோங்க. மிக்சர் இருந்தா எதக்கலும் கொதக்கலுமா அரைச்சு வெச்சுக்கோங்க. ஹிண்டி தயார். அங்கெல்லாம் உறப்பு நல்லா சாப்பிடுவாங்க. ஆகையால நெறைய மொளகாப்பொடி போடுவாங்க. நமக்குத் தேவைக்கு நம்ம போட்டுக்கலாம். பச்சைப் பூண்டு பிடிக்காதவங்க பூண்டுப் பற்கள எண்ணெயில்லாம வதங்கியும் போடலாம்.

ஈருள்ளிச் சப்பாதிய தட்டுல போட்டுக்கோங்க. ஹிண்டிய தட்டுல பொடி போட்டுக்கிற மாதிரி போட்டுக்கிட்டு அதுல மொசுர (தயிர) ஊத்திக் குழப்புங்க. குழப்புன விரல சும்மா விடாதீங்க. அப்புறம் சப்பாத்தியத் தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்க...........அடடா! என்ன அருமை! என்ன அருமை!

தயிர்ச்சோறு சாப்பிடும் போது அதுல கொஞ்சம் ஹிண்டியத் தூவிக்கிட்டா பிரமாதமா இருக்கும். தோசைக்கும் இந்த ஹிண்டி மொசுரு நல்லாயிருக்கும். செஞ்சு பாத்துட்டுச் சொல்லுங்க. அப்புறம் நீங்களும் ஹிண்டி மொசுரு விசிறிதான்.

அன்புடன்,
கோ.இராகவன்



நமது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தப் புகைப்படத்தை இங்க போடுறேன். வெப்காமிராவுல எடுத்ததால தெளிவா இல்லை. படத்துல பாக்குறது ஹிண்டி. இதுலதான் மொசுரு (தயிர்) கலந்து சாப்பிடனும்.

Monday, January 02, 2006

முழுநெல்லி பிசைஞ்ச ஊறுகாய்

தேவையான பொருட்கள்
முழுநெல்லிக்காய் - வேண்டிய அளவு
மிளகாய்த் தூள் - அளவிற்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - வேண்டிய அளவு

செய்முறை
1. நெல்லிக்காயை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.
2. சிறிதளவே தண்ணீர் விட்டு, அதில் மஞ்சப்பொடியும் போட்டு, நெல்லிக்காய்களை ஆவியில் நன்றாக வேகவிடவும். வேகும் பொழுது அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
3. வெந்த பிறகு நெல்லிக்காய்களை எடுத்து ஆறவைக்கவும்.
4. ஆறிய நெல்லிக்காய்களைப் பிதுக்கினால் சதையும் கொட்டையும் தனித்தனியாக வந்துவிடும்.
5. சதைப்பற்றை மட்டும் எடுத்துக் கொண்டு லேசாகப் பிசையவும். கஞ்சியாகவும் பிசையக் கூடாது. முழுசாகவும் விட்டு விடக்கூடாது. இரண்டும் கலந்தாற்போல இருக்க வேண்டும்.
6. அடுப்பில் வாணலியைக் காய வைத்து எண்ணெய் விடவும்.
7. கடுகு உளுந்தம் பருப்பு போட்டு வெடித்ததும், கருவேப்பிலைகளைப் போடவும்.
8. பெருங்காயமும் மிளகாய்த்தூளும் தேவையான உப்பும் கலந்து எண்ணெய்யில் போடவும்.
9. உடனேயே நெல்லிகாய் பிசையலைப் போட்டு நன்றாகக் கிண்டவும்.
10. பார்ப்பதற்கு அல்வா பதத்திற்கு வந்ததும் சட்டியை இறக்கி வைக்கவும்.
11. அருமையான நெல்லிக்காய் பிசைஞ்ச ஊறுகாய் தயார். தயிர்ச்சோறு, தோசை, இட்டிலி வகைகளுக்கு நன்றாக இருக்கும்.


அன்புடன்,
கோ.இராகவன்